fbpx
Homeதலையங்கம்வேட்டைக்குத் தயாராகும் இந்திய ஒலிம்பிக் சிங்கங்கள்!

வேட்டைக்குத் தயாராகும் இந்திய ஒலிம்பிக் சிங்கங்கள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33 வது ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கி இருக்கிறது. முதன்முறையாக மைதானத்திற்கு வெளியே சென் நதியில் அனைத்து நாட்டு அணியினரும் படகுகளில் அணிவகுக்க தொடக்க விழா கோலாகலமாக நடந்தேறி உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றிலே இல்லாத அளவில் இம்முறை சுமார் 1 கோடி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்கிறார்கள். இம்முறை ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைப்பது உறுதி என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார், நீரஜ் சோப்ரா. இம்முறையும் இந்தியாவின் பார்வை அவர் மீதுதான் இருக்கும். தவிர, இளம் வீராங்கனைகளான ஜெனா மற்றும் அன்னு ராணியும் ஈட்டி எறிதலில் பங்கேற்கவுள்ளனர்.

4X400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக முகமது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், மற்றும் எம்.ஆர்.பூவம்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மீராபாய் சானு, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக மகளிர் பளு தூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து தங்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் களமிறங்குகிறார்கள்.

மல்யுத்தத்தில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அரிஹந்த் பங்கல், வினேஷ் போகத், அன்ஷு மாலிக், ரித்திகா ஹூடா, நிஷா தாஹியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆடவர் பிரிவில், 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் அமன் செஹ்ராவத் மட்டுமே பங்கேற்கிறார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சுபா வெங்கடேசன், 4000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். வித்யா ராம்ராஜ், 400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் பங்கேற்கிறார்.

இவர்கள் தவிர்த்து நீளம் தாண்டுதலில் தூத்துக்குடி ஜெஸ்வின் ஆல்ட்ரின், ஆடவர் ரிலே போட்டியில் திருச்சி ராஜேஷ் ரமேஷ், தொடர் ஓட்டப் போட்டியில் போட்டியில் சந்தோஷ் குமார் தமிழரசன், துப்பாக்கி சுடுதலில் திருச்சி பிருத்திவிராஜ் தொண்டைமான், தடகளம் மும்முறை தாண்டுதல் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ள பிரவீன் சித்திரவேல், டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அனுபவம் வாய்ந்த ரோகன் போபண்ணாவுடன் களமிறங்கும் என்.ஸ்ரீராம் பாலாஜி உள்பட 13 பேர் தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக்கில் களமிறங்குகின்றனர்.
போட்டி ஆரம்பமாகி விட்டது.

இந்திய ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக மத்திய அரசு ரூ.470 கோடி செலவிட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறது. அதற்கான பலனாக, கொத்து கொத்தாக பதக்கங்களை வென்று வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பதக்கம் வெல்லும் முனைப்போடு வேட்டைக்குத் தயாராகும் இந்திய சிங்கங்களே, வாழ்த்துகள்!!

படிக்க வேண்டும்

spot_img