fbpx
Homeதலையங்கம்உச்சநீதிமன்றத்தின் கண்டன கணைகள்!

உச்சநீதிமன்றத்தின் கண்டன கணைகள்!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஏன் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கிடையில் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சுந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “மணிப்பூரில் மே 4 ஆம் தேதி பாலியல் வன்முறை நடந்துள்ளது?.

ஆனால் வழக்குப் பதிவுசெய்ய 18 நாட்கள் தாமதம் ஏன்?. அந்த எப்.ஐ.ஆர்-களிலும் குற்றவாளிகள் பெயர் எதுவும் இல்லாதது ஏன்?. அருகாமை போலீஸ் ஸ்டேஷனுக்கு எந்த தகவலும் தெரியாதா?

ஒரு மாதம் கழித்து ஜூன் 18 ஆம் தேதிதான் வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த தாமதம் ஏன்?. குற்றவாளி கும்பலிடம் போலீஸாரே பெண்களை விட்டுச் சென்றனர் என்பது அதிர்ச்சிகரமானது. நிர்பயா வழக்கு போன்ற தனிப்பட்ட வழக்கு அல்ல இது.

மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க பெண் நீதிபதிகளை உள்ளடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் அமைக்கும் எனவும் தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

ஆக, மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடூரத்தை அம்மாநில அரசும் காவல்துறையும் திட்டமிட்டு மறைத்திருக்கிறது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தி விட்டது.

இத்தனைக்குப் பிறகும் உறுதியான நடவடிக்கையை எடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் இன்னும் பதவி விலகாமல் இருப்பது நாட்டு மக்களுக்கு வேதனையை தந்துள்ளது.

தற்போது இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தன் கையில் எடுத்துள்ளது. அதன் கண்டனக் கணைகள் மணிப்பூரில் பற்றி எரியும் கலவரத் தீயை அணைக்கட்டும்.
மணிப்பூரில் நிரந்தர அமைதி திரும்பட்டும்!

படிக்க வேண்டும்

spot_img