கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.
இதனால் அந்தப் பகுதியே சின்னாபின்னமாகியுள்ளது. நிலச்சரிவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் இன்னும் நீங்கவில்லை.
இந்நிலையில் கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே கேரள கடற்கரையில் நாளை இரவு வரை உயர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது. மீட்புப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றாலும் அடுத்த கட்ட நகர்வாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கேரளா இதுவரை கண்டிராத பேரிடர் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
உயிரிழப்பு மட்டுமின்றி வீடு, அசையும், அசையா சொத்துக்கள் என வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்து ஆயிரக்கணக்கானோர் பரிதவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டியது மிகமிக அவசரமானது.
அதற்கான முயற்சிகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால் அதற்கு பெருந்தொகை தேவைப்படுகிறது.
மத்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டினால் மட்டுமே நிலச்சரிவால் ஏற்பட்ட வடுக்களைத் துடைத்தெறிய முடியும். கேரள நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி உள்ளனர்.
மத்திய அரசு, மூத்த அமைச்சர்கள் தலைமையிலான குழுவை கேரளாவுக்கு உடனே அனுப்பி வைத்து தேவையான நிதியை வழங்கிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் விருப்பம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தமிழகத்தில் புயல், நெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசு ரூ.37 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரண நிதி கேட்டும் வழக்கமாகத் தரவேண்டிய தொகையைத் தான் மத்திய அரசு தந்ததே தவிர சிறப்பு நிதி ஒரு பைசாகூட வழங்கவில்லை. தேசிய பேரிடராகவும் அறிவிக்க மறுத்தது.
170 க்கும் மேற்பட்டோர் உயிரை பலிவாங்கிய வயநாடு நிலச்சரிவுக்கான நிவாரணத்திற்கு தமிழ்நாடு கேட்ட தொகையை விட அதிகமாகத் தேவைப்படும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லையே, எப்படி கேரளாவுக்கு கொடுப்பது? என மத்திய அரசு கைபிசைந்து நிற்காமல் கேரளாவிற்கு கைகொடுக்க வேண்டும்.
கேரளாவிற்கு 50 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுத்தாலும் தமிழ்நாடு அரசு ஒருபோதும் அதனை எதிர்க்காது, எப்படி கொடுக்கலாம் என கேள்வியும் கேட்காது. மாறாக தமிழ்நாடு முதல்வர் மு-.க.ஸ்டாலின் வரவேற்பார்.
எனவே வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் ஒரு பகுதி தொகையை அவசரப் பணிகளுக்காக உடனே வழங்க வேண்டும் என்றும் நாட்டு மக்களோடு நாமும் வலியுறுத்துவோம்.
உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம். வயநாடு நிலச்சரிவு பகுதி மக்கள் விரைவில் சகஜநிலைக்கு திரும்ப இறைவனை வேண்டுவோம்!