இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு டார்ச்சர்
கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடிக்கிறார்கள்.
இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இதனை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள், அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து வருகிறது.
மேலும் முதலமைச்சர்களை அழைத்து ஆளுநர் மசோதாக்கள் மீது விவாதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில்தான் அண்மையில் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை முடக்க எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்க முடியுமோ அதையெல்லாம் சிந்தித்துச் சிந்தித்துச் செயல்படுத்தி வந்துள்ளார். அண்டை மாநிலமான கேரள ஆளுநரும் அப்படித்தான்.
இந்நிலையில், பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பது போல, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்குதான் உண்டு என ஜார்க்கண்ட் ஆளுநரும் கோவை முன்னாள் எம்.பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் முத்தான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் பதவி என்பது அதிகாரம் பெற்ற பதவி அல்ல. அரசியல் சாசனத்தை பாதுகாக்கிற ஒரு பதவி. மாநில முதலமைச்சருக்குதான் மக்களின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றும் அதிகாரம் உண்டு
என பட்டவர்த்தனமாகத் தெளிவுப்படுத்தி உள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்ட ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்து உண்மையை ஒப்புக் கொண்டதுபோல் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துப் பாராட்டியும் வருகிறார்கள்.
இந்த உண்மையை அனைத்து மாநில ஆளுநர்களும் உணர்ந்து இனியாவது மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தந்தால் மாநிலங்களின் வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியே விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
உண்மையை உரக்கச்சொன்ன ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை எத்தனை பாராட்டினாலும் தகும்!