fbpx
Homeதலையங்கம்இதயங்களை வென்ற முதல்வர் ஸ்டாலின்!

இதயங்களை வென்ற முதல்வர் ஸ்டாலின்!

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து விட்டார். கட்சி அலுவலகத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் நடந்து முடிந்தது.
முன்னதாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். 72 குண்டுகள் முழங்க கேப்டனின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

விஜயகாந்த் மறைந்தது முதல், அவரது நல்லடக்கம் சீரிய வகையில் நடத்தப்பட்டது வரை, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழக அரசு தரப்பில் இருந்து பல வகைகளிலும் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கப்பட்டன.

விஜயகாந்த்தின் நல்லடக்கம் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஏற்பாடுகள், மலர் அலங்காரங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, சிறப்பான முறையில் செய்தது.

அரசு மரியாதை என்றால், செலவுகளை அரசு ஏற்பது வழக்கமான நடைமுறை என்றாலும், மிகப்பெரிய அளவில் தீவுத் திடல் முதல் கோயம்பேடு வரை ஊர்வலம் நடத்தியது முதல்வரின் தனி அன்பால் தான் என்கிறார்கள்.

விஜயகாந்தின் உடல் மியாட் மருத்துவமனையி லிருந்து அவருடைய சாலிகிராமம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டதும், முதல் ஆளாகச் சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பிரேமலதா குடும்பத்தினரிடம் பேசி, என்னென்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் செய்து கொடுத்து வந்தனர்.

விஜயகாந்த் குடும்பத்தினரின் விருப்பப்படி, அவரது உடலை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்ததுமே, அதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் இருந்து உடனடியாக தொடங்கின.

மேலும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டையொட்டி நேற்று சென்னையில் பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்றிருந்த நிலையில், அந்த கொண்டாட்ட நிகழ்வினையே ரத்து செய்து, பெரியார் திடலில் மிகவும் எளிமையான முறையில் விழா நடந்தது. விஜயகாந்த் மறைவையொட்டி, அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவே இல்லை.

மேலும், அதிகாலையில், விஜயகாந்த் உடலை வாகனம் மூலம் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லும் பணிகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டன. தீவுத் திடலில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் கண்டிப்பான உத்தரவால் காவல்துறை தொடங்கி, அனைத்து தரப்பினரும் பார்த்துப் பார்த்துச் செய்தனர்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர், அவரது திருமணமே கருணாநிதி தலைமையில் தான் நடந்தது என்றாலும், தேமுதிக தொடங்கப்பட்டது முதலே, அக்கட்சி திமுகவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறது.

அப்படி இருந்தும், விஜயகாந்த் மீது வைத்துள்ள அன்பினால், முதல்வர் ஸ்டாலின், அவருக்கு மிகச்சிறந்த மரியாதையை அரசு சார்பில் அளித்து பிரியாவிடை கொடுத்திருக்கிறார்.

கருணாநிதி மறைந்தபோது கண்ணீருடன் பேசிய விஜயகாந்த்தை நினைவுகூர்ந்து, இதுவரையிலான விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து, மிகச்சிறப்பான மரியாதையை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந் தின் உடலை அடக்கம் செய்ய பிரேமலதா குடும்பத்தினர் முடிவு செய்ததுமே, அதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்தை சென்னை மாமன்றத்தில் கொண்டுவரச் செய்தார் ஸ்டாலின். தமிழக அரசு தரப்பில் விஜயகாந்த் குடும்பத்துக்குத் தேவையான அத்தனை உதவிகளும் கேட்காமலேயே அளிக்கப்பட்டன.

இதைவிட சிறப்பான மரியாதையை யாரும் தந்துவிட முடியாது என்ற அளவுக்கு முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் இருந்ததாக பொதுமக்கள் பலருமே தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்துக்கு உச்சபட்ச மரியாதை அளிக்கப்பட்டதன் மூலமும், நல்லடக்க நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலமும் மக்களின் இதயங்களை வென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

படிக்க வேண்டும்

spot_img