ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், பாஜக ஆட்சியில் இருந்த இத்தனை ஆண்டுகளும் (2022 வரை) அக்கட்சி மட்டும் சுமார் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்த நிதியில் 58% ஆகும்.
எனவே தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும், நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது எஸ்பிஐ தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, 12ம் தேதி (இன்று) மாலைக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது ஜனநாயக நாடு. அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனநாயகத்தைக் காக்க நாங்கள் இருக்கிறோம்
என்பதை உறுதி செய்யும் வகையிலான அருமையான, பாராட்டி வரவேற்கத் தக்க நியாயத் தீர்ப்பை வழங்கி உள்ளது.
தேர்தல் அறிவிக்கப்படவுள்ள வேளையில் தங்கள் மீது எதிர்மறைச் சிந்தனைகள் மக்கள் மனத்தில் படிந்துவிடக்கூடாது என பாஜக நினைக்கிறது. அதனால் தான் பட்டியல் வெளியாகாமல் இருக்க… அதுவும் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகாமல் இருக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை பலிகடா ஆக்கி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள பெரு முயற்சி மேற்கொண்டது.
அது முடியாமல் போன நிலையில், 2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) ஒன்றிய பாஜக அரசு நேற்று திடீரென நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இதுவும் அரசியல் தந்திரமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் அந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. ஆனால், தேர்தல் பத்திர விவகாரம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் அதில் இருந்து ஊடகத்தினரையும், பொதுமக்களையும் திசை திருப்ப ஒன்றிய பாஜக அரசு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு யார் யாரெல்லாம் கோடிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது வெளியாகப் போகிறது. இன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிடப்போகும் அந்தத் தகவல்களுக்காக நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இதனால் ஏற்படப்போகும் தாக்கம் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆளும் ஒன்றிய அரசின் தன்னிச்சையான போக்குக்கு கடிவாளம் போட்டு சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்றி இருக்கிறது உச்சநீதிமன்றம். அதற்காக தலைமை நீதிபதி உள்ளிட்ட மாண்புமிகு நீதிபதிகளை நாடே போற்றுகிறது.
நாமும் பாராட்டுவோம், வாழ்த்துவோம்!