fbpx
Homeபிற செய்திகள்உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கும் ஜெகதீப் தன்கர் - நியாயமா?

உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கும் ஜெகதீப் தன்கர் – நியாயமா?

மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு ஒரு மாதமும், குடியரசுத் தலைவருக்கு மூன்று மாதங்களும் என்று கால வரையறையை நிர்ணயித்த உச்சநீதிமன்றத்தின் ஆதரவும் எதிர்ப்புமாக கலவை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஒருதரப்பில் போற்றப்பட்டாலும் இன்னொரு தரப்பினரோ, குடியரசுத் தலைவருக்கு கெடு விதிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.


மசோதாக்களை நீண்ட காலம் அசாதாரணமாக தேக்கி வைக்கக்கூடாது என்பதற்காக அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பைக் கண்டு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘‘ஆகா, என்ன ஜனாதிபதிக்கே காலக் கெடுவா?’’ ‘ஜனநாயகத்திற்கு எதிரான ஏவுகணையாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்’’ என்று பேசியிருக்கிறார்.


நேற்றைய தினம் கூட, தன்கர் மீண்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயர்வானது. எம்பிக்களே எல்லாவற்றையும்விட மேலான எஜமானர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது எவ்வகையில் சரியானது? அவரது பொறுப்புக்கு ஏற்றதுதானா? குடியரசுத் தலைவராகட்டும்; ஆளுநராகட்டும் எவரானாலும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்கும் மேம்பட்டவர்களா? உச்சநீதிமன்றம் தனது நிர்வாகக் கடமையைத்தானே செய்துள்ளது. ‘முழு நீதி’ கிடைக்க இப்படி காலக்கெடு வகுக்கப்பட்டிருக்கிறது. இது எப்படித் தவறாகும்?


குடியரசுத் தலைவரின் மாண்பை இத்தீர்ப்பு குறைக்கவில்லை; அவரது கடமையை ஜனநாயக நாட்டில் சரிவர நிறைவேற்றத்தக்க ஒரு வழிமுறை ஏற்பாடுதானே இந்தக் காலக்கெடு. இதனைப் பெருந்தன்மையோடு குடியரசுத் தலைவர் ஏற்பார் என்பதில் சந்தேகமில்லை. குடியரசுத் தலைவரின் செயல்பாட்டில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளை இத்தீர்ப்பு ஒழுங்குபடுத்துகிறதே தவிர, தவறாக எதையும் கூறவில்லை என்பதே சரியான கண்ணோட்டமாக இருக்க முடியும்.


இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள விலக்கு (ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும்) தனிப்பட்ட பதவியைக் கருதியே தவிர, அவரது செயல்பாடுகள் சட்டப் பரிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்று அல்ல.


நாடாளுமன்றம் நிறைவேற்றிடும் சட்டத்தைச் செல்லுமா? செல்லாதா? என்று பரிசீலித்து, அதனை செல்லாது என்று கூறும் அதிகாரம் யாருக்கு உள்ளது? உச்சநீதிமன்றத்திற்குத் தானே.

குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தானே. குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்து விட்டார்; அதனை ஆராயவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்றா அரசமைப்புச் சட்டம் கூறுகிறது?


காலதாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியல்லவா? அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 என்பது அரசமைப்புச் சட்டப்படி உள்ள பரிகார விதி மட்டுமல்ல; வேறு எந்தப் பிரிவிலும் இல்லாத கூறு 142 இல் உள்ள முழு நீதி (Complete Justice) என்பது அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதுதானே. இந்த நிலையில், அதனைக் குறை கூறுவது நியாயமா?


உயரிய பொறுப்பில் இருக்கும் ஜெகதீப் தன்கர் பொதுவெளியில் உச்சநீதிமன்றம் மீதான விமர்சனத்தை முன்வைப்பதைத் தவிர்த்திருக்கலாம்; தனது கருத்தை தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தெரிவித்து இருக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து.


நாடாளுமன்றம் உயர்வானது தான்; குடியரசுத் தலைவர் பதவியும் உயர்வானது தான்; உச்சநீதிமன்றமும் உயர்வானது தான். குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் பதவியும் உயர்வானது தான். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலானது அரசமைப்புச் சட்டம் தானே. அவரவர்களுக்கு என்ன அதிகாரம் என்பதை அரசமைப்புச் சட்டமே வரையறை செய்துள்ளது.


அப்படியிருக்க, யார் பெரியவர், யாருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது, என்ற கேள்விகளை எழுப்பி மோதல் போக்கை உருவாக்குவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!

படிக்க வேண்டும்

spot_img