ஜான்சன் & ஜான்சன் மெடெக் நிறுவனம் உலகளவில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான முதல் உலகளாவிய சிறப்பு மையமாக கோவை கங்கா மருத்துவமனையை அங்கீகரித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப் பந்தம் கோவையில் கையெழுத்தானது.
இது குறித்து கங்கா மருத்துவமனை தலைவரும், எலும்பியல் நிபுணருமான டாக்டர் எஸ். ராஜசேகர் கூறுகையில், “ஜான்சன் & ஜான்சன் மெடெக் என்பது கடந்த 139 ஆண்டுகளாக புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் மூலம் நோயாளி பராமரிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
தற்போது எங்கள் மருத்துவமனை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உலகளாவிய சுகாதார நிபுணர்களுக்கு அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எங்கள் மருத்துவமனையின் சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஜான்சன் & ஜான்சன் மெடெக் ஆசியா பசிபிக், கங்கா மருத்துவமனையை காயம், மூட்டு மாற்று மற்றும் விளையாட்டு மருத்துவ அறுவை சிகிச்சைகளில் உலகளாவிய சிறப்பு மையமாக நியமித்துள்ளது” என்றார்.
இந்த முயற்சி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான அறுவை சிகிச்சை பயிற்சியில் இந்தியாவை உலக அளவில் நிலை நிறுத்தும். மேலும் பல முன்னேறிய நாடுகளிலிருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயிற்சிக்காக இந்தியா வருவார்கள் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.