இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கை அவர் தொடங்கி வைத்துள்ளார்.
2020 ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது வீராங்கனை மனு பாக்கர் ஒரு கஷ்டமான சூழ்நிலையை அனுபவித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போட்டியின்போது துப்பாக்கி பழுதடைந்ததால் அவரது பதக்கக் கனவு தகர்ந்தது.
ஆனால் தோல்வியை வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்ட மனு பாக்கர், அதன்பின்னர் கடந்த மார்ச் மாதம் நடந்த துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில் வெண்கலம் வென்றார். 2022, 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களைப் பெற்றார். இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்துள்ளார்.
தொடர்ந்து கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சந்தீப் சிங் உடன் இணைந்து தகுதிச் சுற்று போட்டியில் மனு பாக்கர் விளையாடுகிறார். இந்தப் போட்டி இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதே போன்று, மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் மனு பாக்கர் விளையாட இருக்கிறார். இந்தப் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளிலும் அவர் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதேபோல மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
மனுபாக்கர் தொடங்கி வைத்த வெற்றிக்கணக்கை பிற இந்திய வீரர்கள் & வீராங்கனைகள் வெற்றியுடன் தொடர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முதல் பதக்கம் பெற்றுத்தந்த மனு பாக்கருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து ஊக்கமளித்துள்ளனர்.
அரியானா பெண் சிங்கம் மனுபாக்கரை நாடே வாழ்த்துகிறது!