பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ள இந்தியா இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என உறுதி செய்துள்ளது.
தற்போது, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டது.
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.
நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வந்தது.
சரியாக, நேற்று மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவில் தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் முன்பே தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி மாலை 5.22 மணியில் இருந்து தொடங்கியது. விண்வெளியில் சாதனை படைக்கும் இந்தியாவின் முயற்சியின் முக்கிய பகுதியாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு அமைந்துள்ளது.
இதன்பின்னர், மாலை 5.46 மணியளவில் விக்ரம் லேண்டரை நிலவின் தரை பகுதியில் இறக்கும் கட்டம் தொடங்கியது என இஸ்ரோ அறிவித்தது. விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. தானாக தரையிறங்கும் திட்ட நிகழ்வு (ஏ.எல்.எஸ்) தொடங்கப்பட்டது.
இதனால், லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நடந்தது. இதன்பின்னர், நிலவில் எந்த பகுதியில் தரையிறங்குவது என்ற பகுதியை லேண்டர் தேர்வு செய்தது. பின்னர் தரையிறங்கியது. ஆக, விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது.
அதாவது, பிற 3 நாடுகளை விட இந்தியா வேறலெவலில் பிரமிக்க வைக்கும் சாதனையை படைத்துள்ளது. ஏனென்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை நிலவின் தென்துருவத்தின் பக்கம் சென்றதே இல்லை. மாறாக இந்தியா தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி மாஸ் காட்டி வெற்றி பெற்றுள்ளது.
நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த மாபெரும் வெற்றியை இந்தியர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். இதற்காக ஓய்வின்றி அயராது உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்! நன்றிகள்!
இந்தியனாய் பெருமை கொள்வோம்!