fbpx
Homeதலையங்கம்மாஸ்க் அணிய மறவாதீர்- கோவை மக்களே உஷார்!

மாஸ்க் அணிய மறவாதீர்- கோவை மக்களே உஷார்!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

குறிப்பாக பல இடங்களில் மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. பருவநிலை மாற்றம், மழை காரணமாக பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவையைப் பொறுத்தமட்டில் ஃப்ளூ காய்ச்சல் பரவல் என்பது மாவட்டம் முழுவதும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளது. இந்நிலையில் தான் கோவை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.

குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக்கூடும். காய்ச்சல், உடல்வலி, மூக்கில் நீர்வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது.
பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவர்.

இக்காலக்கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறவைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் கலக்கி தொண்டையில் படுமாறு வாய் கொப்பள்ளிக்க வண்டும்.

இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா போல இது கொடுமையானது இல்லை தான் என்றாலும் ப்ளூ காய்ச்சல் வந்தால் மருந்து, மாத்திரை, மருத்துவமனை என அவதிப்பட்டுத் தானே ஆக வேண்டும்.

ஆகவே, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை ஏற்று நடந்து, நோய் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்வோம், சின்னஞ்சிறார்களுக்கும் ஃபுளூ காய்ச்சல் வராமல் பாதுகாப்போம். கோவை மக்களே உஷாராக இருங்கள்.

நோய் வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம்?

படிக்க வேண்டும்

spot_img