Homeதலையங்கம்இணையப் பயன்பாடு - குழந்தைகளை மீட்போம்!

இணையப் பயன்பாடு – குழந்தைகளை மீட்போம்!

இப்போது சமூக ஊடகங்கள் பயன்பாடு குழந்தைகளிடத்தில் அதிகரித்துவிட்டது. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் அதில் அவர்கள் திசைமாறிச் சென்று ஆபத்தான விஷயங்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் கிடைக்கும் கன்டென்ட் உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தி வருகின்றன. இது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதால் பெற்றோர்கள் மத்தியில் இது தொடர்பான கவலை மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு வயது வரம்பு வேண்டும் என்று பரவலாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து ஒரு வழக்கு விசாரணையின்போது கவலை தெரிவித்திருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம், குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை கையாளும்போது நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளது.

மது அருந்துவதற்கு நாடு முழுவதும் இருக்கும் வயது வரம்பு சட்டத்தைப்போலவே சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

நீதிபதி நரேந்தர், “ குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வதே சிறந்தது. இன்று பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டனர். குறைந்தபட்சம் பயனர் வயது வரம்பை கொண்டு வர வேண்டும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவருக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்” என்று தனது நியாயமான கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

சில ஆன்லைன் கேம்களை அணுகுவதற்கு பயனர் கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்போது சட்டம் உள்ளது. சமூக ஊடகங்களை அணுகுவதற்கு ஏன் அதே நடவடிக்கைகளை நீட்டிக்கக் கூடாது?

குழந்தைகளின் எதிர்காலம் கருதி, இதுபோன்ற கருத்துகளை அரசு கவனத்தில் கொண்டு, தேவைப்பட்டால் ஒரு நிபுணர் குழுவைக் கூட அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு கொண்டுவருவது குறித்து அரசு ஏன் இதுவரை சிந்திக்க வில்லை? சமூக வலைதளங்களில் மட்டுமின்றி இணையத்திலும் மனதை கெடுக்கும் விஷயங்களை அகற்ற வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img