fbpx
Homeதலையங்கம்சமூக நீதிக் காவலனை வணங்கிப் போற்றுவோம்!

சமூக நீதிக் காவலனை வணங்கிப் போற்றுவோம்!

இந்தியாவின் 7-வது பிரதமராகப் பதவி வகித்த வி.பி.சிங் என்று அறியப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவருக்கு முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

வி.பி.சிங் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவின் 7-வது பிரதமராகப் பதவி வகித்த வி.பி.சிங் என்று அறியப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். 1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங் பணியை கண்டு வியந்த இந்திரா காந்தி உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக 1980-ம் ஆண்டு நியமித்தார்.

அந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த முடியாததற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு, பதவி விலகவும் முன்வந்தார். 1984 முதல் 1987 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங், 1987-ல் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வி.பி.சிங் ஜன் மோர்ச்சா எனும் கட்சியை 1987இல் நிறுவினார். 1988-ல் ஜன் மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தள், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார் வி.பி.சிங். மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது.

1989 தேசிய முன்னணியைக் கட்டமைத்து, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 7வது பிரதமராக பொறுப்பேற்றார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் வி.பி.சிங்.
காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990-ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது.

பாபா சாகேப் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும்.

அஞ்சா நெஞ்சனாக 11 மாத தனது ஆட்சிக் காலத்தின் நாட்டுக்காக அவர் ஆற்றிய அரும்பணிகள்…அன்றைக்கு அவர் போட்ட விதை இன்றைக்கு மரமாகி மக்களுக்கு தொடர்ந்து இனிப்பான பழம் போல பலன்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியோடு இணைந்து வி.பி.சிங் செயல்பட்ட காலம் தமிழ்நாட்டுக்கே பொற்காலமாக இருந்தது.

அவருக்கு கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போது சென்னையில் சிலை திறந்து வைத்திருப்பது நன்றி மறவாமையைக் காட்டுகிறது.
சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கின் புகழ், வான் உள்ளவரை மறையாது. அவரை வணங்கி நன்றி செலுத்துவோம், போற்றுவோம்!

படிக்க வேண்டும்

spot_img