fbpx
Homeதலையங்கம்பிஎஸ்என்எல் - சரியும் சாம்ராஜ்யம்!

பிஎஸ்என்எல் – சரியும் சாம்ராஜ்யம்!

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை நாடு முழுவதும் பெரும் சாம்ராஜ்யமாக உருவெடுத்திருந்த அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்றைக்கு ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் சிறுத்துப் போய் விட்டது.

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையில் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்தியாவில் ஒருகாலத்தில் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் இருந்து வந்தது.

ஜியோ 4ஜி வந்தபிறகு, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு தாவினர். படிப்படியாக பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் மற்ற தனியார் நெட்வொர்க்குக்கு மாறினர்.

மேலும், ஆட்குறைப்பு, விருப்ப ஓய்வு உள்ளிட்ட காரணங்களினால் 600க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், அலுவலர்கள் பணியில் இருந்து விடைபெற்றனர்.

இதனால், அந்தந்த இடங்கள் காலியாகவே இருக்கின்றன.
மேலும், பிஎஸ்என்எல் அலுவலகங்களில் காலியாக உள்ள கட்டிடங்கள் வாடகைக்கு விடும் திட்டமும் கொண்டு வரப்பட்டது. 2020 ஆம் ஆண்டு வாடகைக்கு விடத் தொடங்கினர். அரசு அலுவலக கட்டிடமே வாடகைக்கு விடும் நிலை ஏற்பட்டது.

நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் கட்டிடங்களில் காலியிட விவரங்கள் திரட்டப்பட்டு, எந்தெந்த இடங்களில் வாடகைக்கு விடப்படும் என்று பிஎஸ்என்எல் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஏடிஎம் மையம் அமைத்தல், ஊழியர்கள் குடியிருப்பு, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை பிஎஸ்என்எல் அலுவலக காலியிடத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்திலும் அரசு நிறுவனங்களுக்கு பிஎஸ்என்எல் கட்டிடம் வாடகைக்கு விடப்படுகிறது. ஆக மொத்தத்தில், பிஎஸ்என்எல் என்ற ஒரு பெரிய சாம்ராஜ்யமானது மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருப்பது கண்கூடாக நிகழ்கிறது.

இதற்கு யார் காரணம்? ஒன்றிய அரசு நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? தற்போது 5ஜியை பல்லாயிரம் கோடிக்கு ஏலம் விட்டு பிஎஸ்என்எல்&ஐ அதலபாதாளத்தில் தள்ளி விட்டுள்ளனர்.

இன்று வரையில் பிஎஸ்என்எல் சேவையில் 4ஜி கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் எப்படி கையாளப்போகிறது–?
பிஎஸ்என்எல் நஷ்டம் அடைவதற்கு பல்வேறு காரணம் இருந்தாலும், ஒன்றிய அரசின் கடைக்கண் பார்வை கூட பிஎஸ்என்எல் மீது படாததே அதி முக்கியக் காரணம் என்றால் மிகையாகாது.

ஒன்றிய அரசு ஏதாவது செய்து பிஎஸ்என்எல்&ஐ தலை நிமிரச் செய்ய வேண்டும் என அதன் ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஒன்றிய அரசின் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் என்ன செய்யப்போகிறது-?

பிஎஸ்என்எல் சேவையை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்து, மெல்ல மெல்ல தனியார்மயமாக்கும் தந்திரம் தானோ?

படிக்க வேண்டும்

spot_img