fbpx
Homeதலையங்கம்தமிழக கிராமங்களை கேரளா கபளீகரம்?

தமிழக கிராமங்களை கேரளா கபளீகரம்?

தமிழ்நாடு — கேரளம் ஆகியவற்றின் எல்லை நெடுகிலும் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தைக் கேரள அரசு நவம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.

1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியில் 230 கி.மீ. தூரம் அளவுக்கே இரு மாநிலங்களின் கூட்டு சர்வே முயற்சியால் அளவிடப்பட்டுள்ளன.

ஆனால், மீதம் இருக்கக்கூடிய 627 கி.மீ. அளவுக்குக் கூட்டு சர்வே நடத்துவதற்குக் கேரள அரசு ஒத்துழைக்காததினால் அந்த வேலை கடந்த 56 ஆண்டு காலமாக அப்படியே கிடக்கிறது. இரு மாநிலங்களின் பெரும்பகுதியின் எல்லை வரையறுக்கப்படாமல் உள்ளது.

ஆனால், தமிழக அரசின் ஒத்துழைப்போ அனுமதியோ இல்லாமல் கேரளம் தற்போது இந்த முயற்சியில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
கடந்த 56 ஆண்டுக் காலத்தில் எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய தமிழக கிராமங்களில் அத்துமீறி உள்புகுந்து பல பகுதிகளை மலையாளிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுகாவில் ஏறத்தாழ 30,000 ஏக்கர் கொண்ட காட்டுப் பகுதியில் மலையாளிகள் உள்புகுந்து காடுகளையும் வெட்டி, மரங்களைத் திருடிக் கொண்டு சென்றதோடு, அப்பகுதியில் ஏராளமாகக் குடியேறிவிட்டனர்.

இதன் விளைவாகக் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் மலையாளிகள் பெரும்பான்மையினராகி அவர்களில் ஒருவரே தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி வருகின்றனர்.

எல்லையில் ஊடுருவும் மலையாளிகள் இதைப்போல குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டம் முதல் கோவை மாவட்டம் வரை இரு மாநில எல்லை நெடுகிலும் அவர்கள் ஊடுருவி காட்டு நிலங்களில் குடியேறி வருவது தொடர்ந்து நடைபெறுகிறது.

இவ்வாறு ஆக்கிரமித்தப் பகுதிகளை தனக்குச் சொந்தமானது என்று காட்டுவதற்கே புதிய சர்வேயை கேரள அரசு நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உடனடியாக இந்தப் பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு இதை நிறுத்தவேண்டும் எனவும் இல்லாவிட்டால் தமிழகத்துக்குச் சொந்தமான ஏராளமான நிலப்பகுதிகளை நாம் இழக்க வேண்டிவரும்.

தமிழக அரசு இப்போதாவது விழித்து கொண்டு கேரள அரசைத் தட்டிக் கேட்க வேண்டும். தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img