ஒரு காலத்தில் சாதாரண போலீஸ் வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டாலே அவரை அந்தக் கிராமமே ஒரு மாதிரியாக பார்க்கும். ஆனால் இன்று எவ்வளவு பெரிய வழக்குகளில் சிக்கினாலும் அவர்கள் ஹீரோக்கள் போல் உலா வருகிறார்கள்.
அப்படியானால் அவர்களுக்கு சட்டத்தைப் பற்றியோ, சிறையைப் பற்றியோ என்ன கவலை இருக்கும்?. மனித உரிமை, மனித நேயம் என்பதெல்லாம் மனிதர்களாக வாழ்பவர்களுக்குத் தான் தேவை. மனிதனாக வாழவும், மனிதனாக நடத்தவும் தகுதியற்றவர்களுக்கு அது தேவையா? என்பது தான் சாதாரணமானவர்களின் கேள்வி.
நமது நாட்டில் ஏற்கனவே தூக்கு தண்டனை பெற்றவர்களே நூற்றுக்கணக்கில் பல்வேறு சிறைகளில் இருக்கிறார்கள்.
தண்டனை வழங்கப்படுவது மட்டுமல்ல. அதை விரைவாக நிறைவேற்றவும் வேண்டும். ஏனென்றால் தண்டனை கிடைத்தாலும் எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தால் மீண்டும், மீண்டும் அவர்களை தவறு செய்ய தூண்டத்தான் செய்யும்.
எனவே செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். குற்றவாளிகள் அதை அனுபவித்தே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் அல்லவா?



