பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் சொத்துக்கள் என்று வர்ணிக்கப்பட்ட அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. இதற்கு தொழிற்சங்கத்தினர், பொது மக்கள் என பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பிரதமர் மோடியின் தனியார்மயமாக்கும் வள்ளல் குணம் மாறவில்லை.
இந்த நிலையில் 100 ‘வந்தே பாரத்’ ரயில்களை (160 பெட்டிகள்) தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலில், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, 4 இரண்டாம் வகுப்பு ஏ.சி பெட்டி, 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் இருக்கும்.
இதை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், அது தனியார் மூலம் தயாரிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) பல ஆண்டுகளாக ரயில்வேக்கு தேவையான பெட்டிகளை தயாரித்து வருகிறது.
இங்கு ரயில் பெட்டி தயாரிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், வந்தேபாரத்’ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளை வெளிநாடுகள் கூட வாங்கி பயன்படுத்தி வருகிறது. மேலும், இதற்கு முன்னரே ‘வந்தே பாரத்’ ரயில்களை ஐசிஎஃப் தொழிற்சாலை தயாரித்து வழங்கி உள்ள நிலையில் இந்த ஆர்டரையும் ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு கொடுக்க மறுப்பது ஏன்?
இன்னும் என்னவெல்லாம் தனியாருக்கு கைமாற்றப்பட உள்ளதோ, தெரியவில்லை. ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்து ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஐசிஎஃப் ஆலைக்கே வழங்க வேண்டும்!



