fbpx
Homeபிற செய்திகள்ஜிஎஸ்டிக்கு எதிராக ஒலிக்கும் மத்திய அமைச்சரின் குரல்!

ஜிஎஸ்டிக்கு எதிராக ஒலிக்கும் மத்திய அமைச்சரின் குரல்!

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டினை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவம் மற்றும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் மீது 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

அவரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகளின் கண்டன குரல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரியின் குரலும் தற்போது இணைந்திருக்கிறது.

‘ஆயுள், மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீதான ஜி.எஸ்.டி-யை நீக்குங்கள்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு பிரீமியங்கள் என இரண்டுக்கும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படுவது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைக்கு வரி விதிப்பதற்கு ஒப்பாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு தனது குடும்பத்துக்கு சில பாதுகாப்பை வழங்குவதற்காக எடுக்கும் காப்பீடுக்கான பிரீமியத்துக்கு வரி விதிக்கப்படக்கூடாது. அதேபோல், மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான 18 சதவிகித ஜி.எஸ்.டி., சமூகத்துக்கு அவசியமான இந்த பிரிவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நிதியமைச்சரிடம் அமைச்சரவையின் ஒரு மூத்த அமைச்சரே பகிரங்கமாக அழுத்தம் கொடுத்திருப்பது பரபரப்பான செய்தியாக இருந்தாலும் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

நிதின் கட்கரியின் கோரிக்கைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன பதில் சொல்லப் போகிறார்? காப்பீட்டுத் திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவாரா, குறைப்பாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img