Homeபிற செய்திகள்புதிய கால்நடை மருத்துவ வாகனங்கள்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

புதிய கால்நடை மருத்துவ வாகனங்கள்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கரூரில் புதிய கால்நடை மருத்துவ வாகனங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு கால்நடை மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு, ஒரு வாகனம் வீதம் மாநிலத்தில் மொத்தமாக 200 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை ஆகஸ்ட் 20ம் தேதி  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதில் கரூர் மாவட்டத்திற்கு 6 வாகனங்கள் ஒதுக்கப்பட்டது.

இந்த ஆறு வாகனங்களையும்  மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கலந்து கொண்டு வாகனத்தின் சாவிகளை ஓட்டுனரிடம் ஒப்படைத்தனர்.

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் என மூன்று பேர் பணியில் இருப்பார்கள் எனவும், கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்க்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கொள்ளப்படும் எனவும், இந்த வாகனத்தின் மூலம் கால்நடை மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் பயனடையும் எனவும், ஒவ்வொரு கிராமத்திலும் இந்த வாகனம்  3 மணி நேரம் பணியில் இருக்கும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கிராமப் பகுதியில் ஏற்படும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், கால்நடை வளர்ப்போர், கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவோர் இந்த வாகனத்தை தொடர்பு கொள்வதற்காக 1962 என்ற கட்டணம் இல்லா எண்ணிற்கு அழைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கால்நடை இயக்குனர் சாந்தி, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர் பாஸ்கர், கரூர் மற்றும் குளித்தலை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர்கள், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img