தேசிய மாணவர் படை (என்.சி.சி.) உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி ஒற்றுமை சுடர் ஓட்டம் என்ற பொருளில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த என்.சி.சி அதிகாரி கர்னல் கே.எஸ்.பதவார் கன்னியாகுமரியிலிருந்து புது டெல்லி வரை 3000 கிலோமீட்டர் தூரம் 4 வழிச்சாலை வழியாக விழிப்புணர்வு ஓட்டத்தை மேற்கொள்கிறார்.
60 நாட்கள் தொடர் ஓட்டமாக செல்லும் அவர் ஒற்றுமை சுடரை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளார். அவருடன் அந்தந்த பகுதியை சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் தொடர் ஓட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.
கடந்த 20-ம் தேதி கன்னியாகுமரியில் ஓட்டத்தை தொடங்கிய அவர் பல்வேறு மாவட்டங்களின் வழியாக தர்மபுரிக்கு நேற்று வந்தடைந்தார். அவருக்கு பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விமானப்படை அதிகாரி விங் கமாண்டர்
அவருடன் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் எஸ். யுவராஜ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி ஜெயப்பிரகாஷ், விமானப்படை வீரர்கள், கல்லூரி என்.சி.சி. அதிகாரி டாக்டர் சீனிவாசன் மற்றும் என்.சி.சி.மாணவர்கள் உடன் வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒற்றுமை சுடர் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, சப்தகிரி, பத்மாவதி, பீ.ஜீ.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஒற்றுமை சுடர் ஓட்டம் செல்லும் என்.சி.சி. அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். கடும் குளிர் மற்றும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் என்.சி.சி. மாணவர்கள் ஒற்றுமை சுடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிக்கு ஜெய்ஹிந்த் கரகோசத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜா, கல்லூரி இயக்குனர் டாக்டர் பிரேம் ஆனந்த், தர்மபுரி அதியமான் பள்ளி என்.சி.சி. அலுவலர் முருகேசன், அதியமான் கோட்டை அரசு பள்ளி என்.சி.சி. அலுவலர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஒற்றுமை சுடர் ஓட்டம் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் செல்கிறது.