கோவை, துடியலூர் வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், பள்ளி மாணவருக்கான உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் தலைமை செயல் அதிகாரி சி.வி ராம்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு வரவேற்றார் .
தன்னார்வ சிறப்பு விருது
2021 ஆண்டுக்கான ஐ.பி.எம். தன்னார்வ சிறப்பு விருது கல்லூரி பெற்றதன் வாயிலாக நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக எதிர்கால தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஸ்வின் கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, மாணவ, மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் தங்களின் எதிர்கால கல்வி குறித்து எவ்வாறு திட்டமிடல் வேண்டும். என்.ஐ.டி ஐ.ஐ,எஸ்.சி, ஐ.ஐ.டி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என விளக்கக்காட்சி மூலம் விளக்கினார்.
படிப்பதற்கு மனம் ஆசைப்பட வேண்டும். அதற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதை மனதில் கொண்டு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எவ்வாறு இக்காலகட்டத்தில் சாதிக்கின்றனர் என்பதனையும் புள்ளி விவரத்துடன் விளக்கினார்.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், கல்லூரியின், விளை யாட்டுத்துறை, ஆங்கில இலக்கிய சமூகம், தமிழ் மன்றம், ஐடியா லேப் , ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் ஏரோ மாடலிங் என பல்வேறு குழுக்கள் நடத்திய செயல்பாடு அடிப்படையிலான கற்றல் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக திறமைகளையும் வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை, கல்லூரி தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி , நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.