சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் 20 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் மக்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
அ ஐ.எஸ்.கே.ஏ. சர்வதேச கராத்தே விளையாட்டு சங்கம் சார்பாக தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் கடந்த மே 28 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடாகா, தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு அணி சார்பாக கோவையில் இருந்து துடியலூர் ஆண்ட்லி ப்ளாக் பெல்ட் அகாடமியில் பயிற்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 16 பேர் பங்கு பெற்றனர்.
ஃபார்ம்ஸ், பாய்ண்ட் ஸ்பேரிங், லைட் கான்டேக்ட், லோ கிக் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில் கலந்து கொண்ட 16 மாணவர்களும் 20 தங்கப் பதக்கங்கள் மற்றும் 9 வெள்ளி 10 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, வெற்றி பதக்கங்களுடன் கோவை திரும்பிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இது குறித்து ஆண்ட்லி பிளாக் பெல்ட் அகாடமி நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்லீ கூறுகையில், தமிழக மாணவர்கள் கிக் பாக்சிங் போட்டியில் தொடர்ந்து தேசிய சர்வதேச அளவில் சாதனை படைத்து வருவதாகவும், தற்போது புதிய அரசில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா கிக் பாக்சிங் போட்டியில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.



