தென்னிந்தியாவின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச், பல்வேறு நோய்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்த மருத்துவ கருத்தரங்குகளை தொடர் மருத்துவக் கல்வி என்ற நிகழ்வின் மூலமாக தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது “நோய் எதிர்ப்பு சிகிச்சைக்கான எதிர்காலம் – BiTE மற்றும் CAR-T சிகிச்சை முறைகள் “ என்ற தலைப்பிலான நிகழ்வை கோயம்புத் தூர், அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸில் வெற்றிகரமாக நடத்தியது.
இந்த கருத்தரங்கு, கைமெரிக் ஆன்டிஜென் ரிசப்டர் டி-செல் சிகிச்சை மற்றும் பைஸ்பெசிஃபிக் டி-செல் என்கேஜர் சிகிச்சை போன்ற நோயெதிர்ப்பு சிகிச்சையின் புதிய அணுகுமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த சிகிச்சைகள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட நோயாளியின் நோயெதிர்ப்பு செல்களை வலுப்படுத்துகின்றன. மேலும் இரத்தம் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் மற்றும் திடமான கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
முன்னணி மருத்துவர்கள், உயிர் மருத்துவ விஞ்ஞானிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், மருந்து நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு CAR-T மற்றும் BiTE சிகிச்சைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், நடந்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் எதிர்கால போக்குகள் பற்றி விவாதித்தனர்.
இதில் கலந்துகொண்டவர்கள் புதுமையான சிகிச்சை உத்திகள் மற்றும் மருத்துவ பயன்பாடுகள்; பயிற்சி செய்யும் புற்றுநோயியல் நிபுணர்களின் அனுபவங்கள் மற்றும் முடிவுகள்; செல் அடிப்படையிலான சிகிச்சையில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் நிகழ்வு ஆய்வுகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற்றனர்.
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர்.A. நிர்மலா, “CAR-T செல் சிகிச்சைக்கு பொது சுகாதாரத்தில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள்” என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் பங்கேற்றார்.
கருத்தரங்கில் உரையாற்றிய கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறியதாவது: மருத்துவ முன்னேற்றங்களின் உச்சத்தை நமது சமூகத்திற்கு கொண்டு வர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
BiTE மற்றும் CAR-T சிகிச்சைகள் குறித்த இந்த கருத்தரங்கு புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அறிவுப் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. நிபுணர்களை ஒன்றிணைத்து, இந்த புதுமையான அணுகுமுறைகள் குறித்த விவாதங்களை எளிதாக்குவதன் மூலம், இந்த சவாலான நோயை எதிர்கொள்ளும் நோயாளிகளின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான CAR-T சிகிச்சைகள் செய்த ஒரே மருத்து வமனை என்ற பெருமையையும் கே.எம்.சி.ஹெச் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



