fbpx
Homeதலையங்கம்பாஜகவை வீழ்த்துமா ராகுலின் யாத்திரை?

பாஜகவை வீழ்த்துமா ராகுலின் யாத்திரை?

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதில் போட்டியிடவில்லை. அது காங்கிரஸ் அனுதாபிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்னதாகவே இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.

இப்போது இந்தியா ஒற்றுமையாகத் தானே இருக்கிறது. இந்த யாத்திரைக்கு என்ன அவசியம்? என்ற கேள்வியை, விமர்சனத்தை எழுப்பியவர்களுக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்தார், தமிழகத்தின் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி.

“இந்தியாவில் எல்லா ஜனநாயக அமைப்புகளின் வாயில்களும் மூடப்பட்டுள்ளன. நாடாளுமன்றம், தேர்தல்கள், ஊடகங்கள் என எல்லாம் முடங்கியுள்ளன.
அப்படியென்றால் மக்களை எப்படி அடைவது? அதனால்தான் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த இந்த யாத்திரையை மேற்கொள்கிறேன்.

வெறுப்புப் பிரச்சாரங்களால் பிரிந்து கிடக்கும் தேசத்தை ஒற்றுமையாக்குவேன்” என்று அவர் கூறினார். வழிநெடுக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லா வயதினரும் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ஆர்பிஐ முன்னாள் ஆளுநர், சமூக செயற்பாட்டாளர்கள், தோழமைக் கட்சியினர் எனப் பலரும் ஆதரவு அளிக்க, ஆரம்பத்தில் பாஜகவால் சட்டை செய்யப்படாத யாத்திரை இப்போது அன்றாடம் விமர்சனம் செய்யப்படும் அளவிற்கு கவனம் பெற்றுள்ளது.

கொரோனா பரவல் பற்றிய செய்தி வெளியானதுமே இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பாஜக கெடுபிடி காட்டியது. இந்த யாத்திரை நாளுக்கு நாள் பெற்றுவரும் பிரபலம் பாஜகவுக்கு குடைச்சலைத் தந்துள்ளதன் விளைவு என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ராகுல் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையின் பலன் 2024 தேர்தலில் எதிரொலிக்கும் என காங்கிரஸ் திடமாக நம்புகிறது. 2022 அரசியல் களத்தில் குஜராத்தின் வரலாற்று வெற்றி மூலம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி மோடி தடம் பதித்திருக்கிறாரோ அதற்கு சற்றும் சளைக்காத தாக்கத்தை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தேசிய அளவில் பாஜகவுக்கு ஒரே மாற்றுக்கட்சி காங்கிரஸ் தான். அந்தக் கட்சி வலுப்பெற்றால் தான் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும்.

நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் அறுதி பெரும்பான்மையை மட்டுமே கருவியாகக் கொண்டு, முக்கிய மசோதாக்களை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் பாஜக ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கு ராகுலின் யாத்திரை முற்றுப்புள்ளி வைக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img