சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் நடு விழா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாக்கள் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் முத்தமிழ் சங்கத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் அறங்காவலர் சிந்து அனைவரையும் வரவேற்றார். பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வ தொண்டு நிறுவன உதவிப்பொது மேலாளர் யோ.ஜெயப்பிரகாஷ், மருத்துவர் சுப்பிரமணியம், பாலு, எஸ்தர் ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) வாசுகி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது: குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு மதிப்பு மரியாதை மற்றும் ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். அதேபோல இயற்கையை பாதுகாக்க தவறினால் சுனாமி மற்றும் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை நம்மால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.