2016ம் ஆண்டில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு திடீரென்று தடை விதித்தது. நவம்பர் 8ம் தேதி இரவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்தார்.
அவற்றுக்குப் பதிலாக புதிய வடிவிலான நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பணமதிப்பிழப்பு என்ற இந்த நடவடிக்கை நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, 1000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக அதை விட அதிக மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இது மக்களிடையே அதிர்ச்சியை மட்டுமல்ல ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
ஏனெனில், உயர் மதிப்பு நோட்டுகளைத் தடை செய்வதாகக் கூறிவிட்டு, அதை விட அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஏன் அறிமுகம் செய்யப்பட்டது? என்ற கேள்வி எழுந்தது.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தவுடன் அதனுடன் பல்வேறு வதந்திகளும், பிரச்சினைகளும் வந்தன. அதாவது, 2000 ரூபாய் நோட்டுகளில் மேக்னட்டிக் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதை வைத்து அந்த நோட்டுகளை கண்காணிக்க முடியும் என்ற வதந்தி வேகமாகப் பரவியது. ஆனால் அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
2000 ரூபாய் நோட்டுகள் காலப் போக்கில் அழியத் தொடங்கின. நிறையப் பேரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் வரவே இல்லை. சொல்லப்போனால் 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கூட கிடைக்கவில்லை.
இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. இந்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சினர். அதை உறுதி செய்யும் வகையில், 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்திவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
பல்வேறு சந்தேகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அதை மாற்றிக் கொள்ள மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதுவரை மட்டுமே அவகாசம் வழங்கப்படும்.
உயர் மதிப்பு நோட்டுகள்தான் பதுக்கல் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்துக்கு ஆதாரமாக இருக்கின்றன என்று கூறிவிட்டு அதை விட அதிக மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை அரசு ஏன் அறிமுகம் செய்தது என்ற கேள்விக்கு விடை கிடைப்பதற்கு முன்னரே அந்த நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
அப்போது இந்த நோட்டுகளை அறிமுகம் செய்ததற்கான நோக்கம்தான் என்ன? இந்த புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பால் மக்கள் மத்தியில் ரூ.2000 நோட்டுக்கள் செல்லுமா? செல்லாதா என்ற குழப்பம் வேறு ஏற்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பால் மக்களுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் இல்லை. எனினும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நிலை தானாகவே வந்து விடும்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை தான் இது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
எது எப்படியோ, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் உங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிவிடுவது நல்லது. 2016ல் வேகமாக வந்து நாட்டையே ஒரு உலுக்கி உலுக்கிய பேய், வேகத்தைச் சற்று குறைத்தபடி மீண்டும் வந்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுக்கு இப்போதிருந்தே விடை கொடுக்கத் தயாராவோம்!



