அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எரிமலைப் போல் வெடித்ததை அடுத்து, பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேரந்தெடுக்கப்பட்டார்.
இதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்புகள் எல்லாம் செல்லாது எனத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.
இப்படி, இரு தரப்பும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர்.
இந்த பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே, சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக 27 ம் தேதி தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி , ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதன்பின் சென்னை திரும்பும் அவர், மறுநாள் மாலை 6 மணிக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்கிறார். இடைபட்ட நேரத்தில், பல்வேறு முக்கிய பிரமுகர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில், சென்னை வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.
இருவரும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து, தங்களுக்கு பிரதமர் ஆதரவு தர வேண்டும் என, வலியுறுத்த உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, பிரதமர் மோடி சமாதானப்படுத்தியது போல், இந்த முறையும் சமாதானப்படுத்துவாரா அல்லது யாரேனும் ஒருவருக்கு மட்டும் ஆதரவு அளிப்பாரா என்பது, அன்றைய சந்திப்புக்கு பின்னரே தெரிய வரும்.
இதற்கிடையே, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடியிடம் இருந்தோ, பாஜக மேலிடத்தில் இருந்தோ எந்த வாழ்த்தும் வரவில்லை.
இதை வைத்து பார்க்கும் போது, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்து செயல்படுவதை, பாஜக மேலிடம் விரும்பவில்லை என தெரிய வந்துள்ளது.
அதிமுகவில் ஏதேனும் திருப்பம் ஏற்படுமா?



