உலகப் பொது மறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு அழைக்கப்படவிருப்பது தமிழர்களுக்கு பெருமிதத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது. வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் கவுண்டியில் இந்த தெரு அமையவிருக்கிறது.
ஆங்கிலத்தில்‘Valluvar Way’ என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த தெரு அழைக்கப்படும். இந்த அறிவிப்பை வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்று இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.
1,330 குறள்களை தந்து அதன் மூலம் மக்களுக்கு நன்னெறிகளை உணர்த்தியவர் தான் திருவள்ளுவர். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை, தனது 133 அதிகாரங்கள் மூலம் தெளிவாக சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
உலகிலேயே பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் வெளியிடப்பட்டு இருக்கும் நூலும் திருக்குறள் தான்.
அதனை எழுதிய திருவள்ளுவரின் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு உதயமாகி இருப்பது உலகத் தமிழர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதனை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
நாமும் கொண்டாடுவோம்!



