தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக நேற்று (22ம் தேதி) மாபெரும் கல்விக் கடன் முகாம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பங்கேற்று 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடனு தவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் மாபெரும் கல்விக் கடன் முகாம்களை நடத்த வேண்டும் என்று ஆணையிட்டார்.
அதன்படி, நேற்று தேனி மாவட்டத்தில் இரண்டாவது கல்விக்கடன் முகாம் நடை பெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பேசியதாவது:
வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இந்த கல்வி கடன் முகாம் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் திட்டங்களை நேரில் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சேமிப்பு மற்றும் கடன் பற்றிய புரிதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த முறை நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 36 மாணவர்களுக்கு ரூ. 1.8 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டது.
இதுவரை, தேனி மாவட்டத்தை சேர்ந்த 136 மாணவர்களுக்கு ரூ.6.36 கோடி மதிப்பில் வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்வி கடன் முகாம்களை பிற மாணவர்களிடம் எடுத்துரைத்து, அவர்களும் பயன்பெற உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தேனி மாவட்டதில் உள்ள வங்கிகளின் மேலாளர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, மாணவர்கள் இணையதளத்தின் மூலம் சுலபமாக கல்விக்கடன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான பணிகள் மற்றும் வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முரளி, முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், உதவி பொது மேலாளர்கள் தனபால் (பாரத ஸ்டேட் வங்கி), தாமோதரன் (கனரா வங்கி), கனரா வங்கி மார்கெட்டிங் மேலாளர் மகாலெட்சுமி, ஊரக வங்கி கடன் பயிற்சியாளர் (கனரா வங்கி) ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



