கோவையை சேர்ந்த யூரோடெக் என்ற நிறுவனத்தினர் நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் ரோவர் கிராப்ட் படகை தயாரித்து கோவைக்கே பெருமை சேர்த்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ராவத்தூர் பகுதியில் யூரோடெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ட்ரில்லிங் மெஷின், கிரைண்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதனிடையே நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் ரோவர் கிராஃப்ட் படகு ஒன்றை தயாரிக்க இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுப்ரதா சந்திரசேகர் மற்றும் அவரது குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, நீரிலும், நிலத்திலும், பனிக்கட்டியின் மீதும் செல்லும் அட்டகாசமான ரோவர் கிராஃப்ட் படகை தயாரித்தனர்.
இந்த ரோவர் கிராஃப்ட் படகின் சோதனை ஓட்டம் சூலூரில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படை பாதுகாப்புடன் நடைபெற்றது. ரோவர் கிராப்ட் படகு நீரில் சீறிப்பாய்ந்ததை அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுப்ரதா சந்திரசேகர் கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறையாக நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் வகையில் ரோவர் கிராஃப்ட் படகை தயாரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனையோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் நிலத்தில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்திலும் பனி படர்ந்த இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில் இந்த ரோவர் கிராஃப்ட் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோவர் கிராஃப்ட் புயல், வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்காகவும், கடலோர பாதுகாப்பு, மற்றும் கப்பற்படையின் கண் காணிப்பு பணிகளுக்காகவும், அவசர காலங்களில் மருத்துவ தேவைக்காகவும் பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 25 லிட் டர் வரை எரிபொருள் செலவாகும். இந்த படகை ஆம்புலன்ஸ் போலவும், சரக்கை ஏற்றிச்செல்லும் படகு போலவும் வடிவமைத்து பயன்படுத்தி முடியும். இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற் றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு சுப்ரதா சந்திரசேகர் தெரிவித்தார்.
கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் நாட்டிற்கே முன்னுதாரணமாக ரோவர் கிராஃப்ட் படகை தயாரித்துள்ளது கோவை மக்களை பெருமையடையச் செய்துள்ளது.



