உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்“ மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்தும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்தும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்தும், கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள பயிர்கடன் குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்க திட்டம் குறித்தும், தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவங்கப்படும் என அறிவித்திருத்தார்கள். அதன்படி அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது.
இம்முகாமானது 15.07.2025 முதல் அக்டோபர் 2025 மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இம்முகாமில், அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது கனிவுடன் பரிசீலனை செய்து 45 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஏற்கனவே நமது மாவட்டத்தில் உதகை மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், கட்டப்பட்டு வரும் புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மழைகாலத்திற்கு முன்பாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் வழங்கப்படும் நிதியினை சரியான முறையில் செலவு செய்திடும் வகையில் திட்டமிட்டு உரிய காலத்திற்குள் வளர்ச்சி திட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், அரசு தலைமை கொறடா, மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில், தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்க்ஷா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கவும், வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் 3 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.4 லட்சம் மதிப்பில் (தலா ரூ.1 லட்சம் மானியம்) புதிய ஆட்டோ ரிக்ஷா வாகனத்திற்கான சாவிகள் மற்றும் நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் குறித்த நான்காண்டு சாதனை மலரினை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் நிஷா, மாவட்ட வன அலுவலர் கௌதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா, மகளிர் திட்ட அலுவலர் மரு.ஜெயராமன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, நகராட்சி ஆணையாளர்கள் மோகன் (கோத்தகிரி), இளம்பரிதி (குன்னூர்), தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர் மு.பொன்தோஸ், கோத்தகிரி நகர்மன்ற தலைவர் ஜெயக்குமாரி, நகர்மன்ற துணைத்தலைவர்கள் ரவிக்குமார் (உதகை), வாசிம்ராஜா (குன்னூர்), சுற்றுலாத்துறை அலுவலர் துர்காதேவி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் சங்கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



