தானியக்கம் மற்றும் இயந்திர உணர்வு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த நான்காவது சர்வதேச மாநாடு (ICAARS 2025), 2025 டிசம்பர் 12ஆம் தேதி, கோவை பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கியது.
கல்லூரியின் டி -பிளாக் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய கல்வியாளர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை பிரிகால் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன், லாப்ப் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுமித் மித்ரா மற்றும் மிநிபிணி அமைப்பின் தலைவர் டாக்டர் டிர்க் ஃப்ரோலிங் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவிற்கு பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரி யின் முதல்வர் டாக்டர் பிரகாசன் தலைமை தாங்கினார். அவர் இயந்திரம் மற்றும் தானியக்கத் துறைகளில் புதுமை மிக்க ஆராய்ச்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் டாக்டர் வினோத் அனைவரையும் வரவேற்று, தொழில்துறைகளுக்கிடையே உள்ள கல்வி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளதாகக் கூறினார்.
மாநாட்டின் செயலாளர் டாக்டர் பிரபாகரன், மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகள் குறித்த ஒரு முன்னோட்டத்தை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள் தனித்தனியாக உரையாற்றி, இந்தியாவில் இயந்திர துறையின் வளர்ச்சி, தொழில்துறை-கல்வி இணைப்பின் முக்கியத்துவம் மற்றும் தானியக்கத்தை வடிவமைக்கும் உலகளாவிய கூறுகளைக் குறித்து பேசினர். மாநாட்டின் செயலாளர் டாக்டர் பிந்து நன்றி கூறினார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எல்.கோபால கிருஷ்ணன், சென்டினரி அரங்கில் தொழில்நுட்ப கண்காட்சியைத் துவக்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் இயந்திரம் மற்றும் தானியக்கத் துறைகளின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 18 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டின் முக்கிய அம்சமாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களின் உரைகள் நடைபெற்றன. தானியங்கி இயந்திரங்கள், தொழில்துறை தானியக்கம், செயற்கை நுண்ணறிவு, மென் இயந்திரங்கள், பல்மாதிரி இயந்திரங்கள் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைச் சார்ந்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
IISC பெங்களூரு, ஐஐடி மெட்ராஸ், IIT பாலக்காடு, ஐஐடிஆராய்ச்சி, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் NUS போன்ற பல்வேறு நிறுவனங்களிலிருந்து வந்த நிபுணர்கள், உலகளாவிய கூறுகள், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் எதிர்கால ஆராய்ச்சிகள் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.
தொழில்துறை, சுகாதாரம் மற்றும் விண்வெளித் துறைகளில் செயற்கை நுண்ணறிவு, சென்சார் ஒருங்கிணைப்பு, தானியங்கி இயந்திரங்கள் மற்றும் மனித-இயந்திர ஒத்துழைப்பு அதிகரித்து வருவது குறித்த உரைகள் அமைந்தன.
ICAARS 2025 மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரம் மற்றும் தானியக்கம், உற்பத்தி, சுகாதாரம் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் போன்ற துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரைகளின் விளக்கவுரைகள் மற்றும் ஆராய்ச்சி பங்களிப்புகள் இடம்பெற்றன.
Industry Connect அமர்வு மூலம் மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, தானியக்கம், சிஎன்சி உற்பத்தி, வெல்டிங் இயந்திரங்கள் மற்றும் நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
“மருத்துவ இயந்திரங்களின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், பல்வேறு தொழில்துறைகள் மற்றும் மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று, இயந்திர அறுவை சிகிச்சை, மறுவாழ்வு சிகிச்சை மற்றும் தொலைதூர சுகாதார சேவைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர். அதே நேரத்தில் செலவு, ஒழுங்குமுறை விதிகள் மற்றும் பயிற்சி போன்ற சவால்களும் விவாதிக்கப்பட்டன.
கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் இடையே பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தி, ICAARS 2025 மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. தானியக்கம், இயந்திரம் மற்றும் நுண்ணறிவுத் துறைகளின் புதுமைகளை ஊக்குவித்து, தேசிய மற்றும் உலகளாவிய அளவில் ஒத்துழைப்பை வளர்க்கும் ஒரு முக்கிய தளமாக இந்த மாநாடு அமைந்தது.



