கரூர் -முனைவர் ராமசுப்பிரமணியனுக்கு நல்லாசிரியர் விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பள்ளிக்கல்வித்துறையில் பள்ளி மற்றும் மாணாக்கர்களின் நலன்களில் தனி அக்கறை கொண்டு சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களின் பணிகளை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறுவதற்கான பட்டியல் தமிழக அரசால் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது. அதில் கரூர் மாவட்டத்தில் 7- ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ஒருவராக வெண்ணைமலை பரணி பார்க் கல்வி குழுமத்தில் முதன்மை முதல்வராக பணியாற்றி வரும் முனைவர் ராமசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முனைவர் ராமசுப்பிரமணியனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் அவருக்கு சமூக வலைதளத்திலும் அலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



