அன்னூர் அருகே மழை வேண்டி கிராம மக்கள் இணைந்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கோவை அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் ஆகிய கிராம மக்கள் ஒன்றுகூடி ஊர் கூட்டம் நடத்தினர். அதில் மழை வேண்டி கழுதைகளுக்கு பஞ்ச கல்யாணி திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்தனர்.
லக்கேபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. பெண் கழுதைக்கு புடவை கட்டி வளையல், பாசி அணிவித்து உதட்டுச் சாயம்,நெகச்சாயம் பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல ஆண் கழுதைக்கு வேஷ்டி அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெற்றது. மேளதாளம் முழங்க கிராம மக்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பின்னர் சீர்வரிசை பொருட்கள் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட பின்னர், வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் பெண் கழுதைக்கு தாலி அணிவித்து திருமணம் விமரிசையாக நடத்தி வைக்கப்பட்டது.



