இந்திய அளவில் வேண்டுமானால் பா.ஜ.க பெரிய கட்சியாக இருக்கலாம், தமிழகத்தில் சிறிய கட்சிதான். அதிமுக தான் பெரிய கட்சி. பா.ஜ.க கணக்கிலேயே இல்லை என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்களின் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடை பெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வனை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ, வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனின் தந்தையும் முன்னாள் சபாநாயகருமான தனபால், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல் வராஜ், அதிமுக மாவட்ட செயலாளரும் கவுண்டன்பாளையம் எம்.எல்.ஏ வுமான பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில் சிறுப்புரையாற்றிய எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: அதிமுகவை பொறுத்தவரை வரும் தேர்தல் மிக முக்கியமானது. தொண்டர்களை நம்பி களம் இறங்கியுள்ளோம். தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் எதையுமே செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என மக்கள் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர் கள் கூட அதிமுக விற்கு வாக்களிக்க தயா ராகி விட்டனர்.
இந்திய அளவில் வேண்டுமானால் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் சிறிய கட்சி தான். மூன்று அல்லது நான்கு சதவிகித வாக்குகள் மட்டுமே அக்கட்சிக்கு உள்ளது. அதிமுக தயவில் தான் அவர்களுக்கு தமிழகத்தில் சில எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே அதிமுக & திமுக இடையே தான் இத்தேர்தலில் போட்டி. பாஜக கணக்கிலேயே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர்,நகர கழக செயலாளர் வான்மதி சேட், மாவட்ட கவன்சிலர் பி.டி.கந்தசாமி, ஒன்றிய குழு பெருந்தலைவர் மணிமேகலை மகேந்திரன், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மாலா உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.