பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையிலிருந்து பூடான் நாட்டிற்கு செல்லும் தன்னார்வலர்களின் இருசக்கர வாகன பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நவீனமயமாக்கப்பட்ட உலகில் பெண்கள் மற் றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மொபைல் போன் செயலி மற்றும் கணிணி தொழில்நுட்பங்கள் மூலம், பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சைபர் கிரிமினல்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகளிடம், செயலிகள் வாயிலாக தொடர்பு கொண்டு, தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையிலே, பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இரண்டு தன்னார்வலர்கள் விழிப்பு ணர்வு வாகன பயணத்தில் ஈடுபடுகின்றனர்.
இதற்கான துவக்க நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விழிப்புணர்வு பயணத்தை துவக்கி வைத்தார்.
கோவையை சேர்ந்த தன்னார்வலர் களான சைபர் கிரைம் கன்சல்டண்டு சங்கர் ராஜ் சுப்ரமணியன் மற்றும் தன்னார்வலர் தினேஷ்குமார் இருவரும் இருசக்கர பயணத்தின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
கோவையில் இருந்து பூடான் நாட்டின் திம்பு வரை இரு சக்கர வாகனத்தில் 14 நாட்களுக்கு சுமார் 6,500 கிலோ மீட்டர் தூரம், இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இது குறித்து விழிப்புணர்வு பயணம் செல்லும் இளைஞர்கள் கூறுகையில், இந்த பயணம் முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும் 14 நாட்கள் 6500 கிலோ மீட்டர் தூரமாக பூடான் செல்ல உள்ளதாகவும், அந்த நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண் குழந்தைகள், பெண்கள், நிறுவனங்கள் என பல இடங்களில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வில் ஈடுபட இருப்பதாகவும், இதற்காக கோவை போலீசார், இந்தியா மற்றும் பூட்டான் அரசாங்கம் முழு ஒத்து ழைப்பை தந்துள்ளது, என் றனர்.