கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டு திறக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது.
அதே சமயம் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாலைக்கு மேல் கனமழை பெய்தது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நொய்யல் ஆற்றில் அதிகமான நீர் வந்ததால் ஆத்துப் பாலம் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டு தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இது போன்ற சமயங்களில் பொதுமக்கள் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.