இதய குறைபாடுகள், குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் மாரத்தான் நடந்தது.
‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ எனும் மாரத்தான் தொடர் ஓட்டத்தை ஜி.கே.என்.எம். மருத்துவமனை, எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதனை நடத்தியது.
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பதி, ஜி.கே.என்.எம். முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் 1, 3, 5 மற்றும் 10 கி.மீ. தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜி.கே.என்.எம்.மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
லட்சுமி கார்ட் குளோத்திங் நிறுவனம், லயன்ஸ் இன்டர்நேஷனல் ஆகியவை இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தன.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலக இருதய தினமும் செப்டம்பர் மாதத்தில் தான் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் சரியாக கிடைப்பதை ஊக்குவிக்கவும் மற்றும் இத்தகைய நோய்களுக்கு பலியான குழந்தைகளின் நினைவை போற்றும் வகையிலும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.



