fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்களுக்கு தடை இன்றி குடிநீரை பங்கிட்டு வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதன்மைச்செயலாளர் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு தடை இன்றி குடிநீரை பங்கிட்டு வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதன்மைச்செயலாளர் அறிவுறுத்தல்

மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலர் கார்த்திகேயன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன் பேசியதாவது: மழை இல்லாத காரணத்தினால் நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது.குடிநீருக்கு ஆதாரமாக இருந்து வரும் நீர் நிலைகளில் இருந்து, இருக்கும் தண்ணீரை சமமாக பங்கிட்டு மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க வேண்டும்.தேவைப்படும் பட்சத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க போர்வெல்கள் அமைக்கப்பட வேண்டும்.

பழுதான போர்வெல்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு அதிகமுள்ள இடங்களில் லாரி வாயிலாக குடிநீர் வழங்க வேண்டும்.தண்ணீர் பந்தல்களை அதிகரிக்க வேண்டும். அதில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன் மற்றும் நான்கு மாவட்ட நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள் மற்றும் நகராட்சி மண்டல இயக்குநர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் சாமண்ணா வாட்டர் பம்ப் ஹவுஸ் பகுதியில் தண்ணீர் எடுக்கப்படும் இடங்கள், பவானி ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அரசு முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, அதிகாரிகள் இடத்தில் எவ்வளவு குடிநீர் எடுக்கப்படுகிறது? எப்படி சுத்தம் செய்யப்படுகிறது? என்பது குறித்த பல்வேறு விஷயங்களுக்கு குறித்து கேட்டறிந்தார்.

படிக்க வேண்டும்

spot_img