குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளிலும் பாஜக – 156, காங்கிரஸ் – 17, ஆம் ஆத்மி – 5, மற்றவை 4 கைப்பற்றியுள்ளது. எனவே குஜராத்தில் பெரும்பான்மை வித்தியாசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
அதே போல், இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – 40, பாஜக – 25, மற்றவை – 3 என வெற்றி பெற்றுள்ளன. குஜராத்தில் படுதோல்வியை சந்தித்தாலும் தற்போது இமாச்சலில் காங்கிரஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பாஜக வசம் இருந்த இமாச்சல பிரதேசத்தை தற்போது காங்கிரஸ் மீண்டும் தன்வசப்படுத்தி உள்ளது. இமாச்சலை பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாஜக மட்டும் தான் கடந்த 1980-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன.
ஆனால் இந்தாண்டும் மீண்டும் பாஜக ஆட்சியமைத்து விடுமோ என்ற சந்தேகத்திலே அனைவரும் இருந்த நிலையில், தற்போது அதனை முறியடித்து காங்கிரஸ் தட்டித் தூக்கியுள்ளது.
இமாச்சல் தேர்தலை பொறுத்த வரையில் காங்கிரஸ் தன்னால் முடிந்த அளவு கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனால் முன்னதாக உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரம் பலனளிக்காமல் போனது.
அதேபோல், இமாச்சலிலும் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரம் வேலை செய்யாதோ என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை முறியடிக்கும் வகையில் இமாச்சல் வெற்றிக்கு பிரியங்கா காந்தியும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
குஜராத்தில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே; ஆனால் இமாச்சலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக தோல்வியைத் தழுவியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாகவே அமைந்துள்ளது. கருத்து கணிப்புகளும் பொய்யாகி இருக்கின்றன.
டெல்லி மாநகராட்சியில் 250 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 127 இடமும், பாஜக 100 இடமும் பெற்று ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சியை பாஜக இழந்துள்ளது. தற்போது இமாச்சலிலும் அதே போல் இழந்துள்ளது. குஜராத் வெற்றியை பாஜக கொண்டாடினாலும் இந்த இரு தோல்விகளும் பாஜகவுக்கு பெரிய அடியே என்பதில் சந்தேகமில்லை!