அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தி.சு.அவினாசிலிங்கத்தின் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் வரவேற்புரையாற்றினார். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தி.ச.க. மீனாட்சி சுந்தரம் தலைமை உரையாற்றினார்.
அதில் அவர் பேசுகையில், “அய்யா சென்னை மாகாணத்தின் முதல் கல்வி யமைச்சராக இருந்து கல்விப் பணிக்காக தம்மையே அர்ப்பணித்தவர். நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகச்செம்மல். அவர் மகளிர் கல்விக்காக பல சாதனைகள் செய்துள்ளார்” என்றார்.
இதைத்தொடர்ந்து மாணவிகளும் அவிநாசிலிங்கம் அய்யாவின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.பின்னர், மாணவிகள் நலன் புல முதன்மையர் வாசுகி சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்குரைஞர் சுமித்ரா சக்ரவர்த்தி அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண்கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெண் கல்விக்காக சாரதாலயத்தை நிறுவி கல்வி வழங்கிய மாமனிதர் அய்யா என்றார். தொடர்ந்து அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.



