மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, பாலப்பட்டி,வச்சினம்பாளையம், நெல்லித்துறை,தேக்கம்பட்டி,சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உணவுக்காகவும்,தண்ணீருக்காகவும் பாகுபலி அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விடுகிறது.
அவ்வாறு நுழையும் யானை ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு,மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.இந்த நிலையில் நேற்றிரவு நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை மேட்டுப்பாளையம் ஊட்டி பிரதான சாலையை கடக்க முயன்றது.
வாகனப்போக்குவரத்து அதிகமாக இருந்ததன் காரணமாக நீண்ட நேரமாக சாலை ஓரத்திலேயே பாகுபலி யானை முகாமிட்டிருந்தது.இதனால் அவ்வழியே சென்ற இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பாகுபலி யானையினை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் நெல்லி மலை வனப்பகுதிக்குள்ளேயே அனுப்பி வைத்தனர்.
இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.



