கோவை- அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் 28வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குடும்பத் தினரின் முன்னிலையில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுமார் 4,990 இளங்கலை பட்டதாரிகள், 1,482 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 135 முனைவர் பட்ட அறிஞர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.
முன்னதாக கல்வி தொடர்பான ஊர்வலம், நடன வரவேற்பு மற்றும் அம்மாவின் தியான ஸ்லோகத்துடன் பாரம் பரிய தீபம் ஏற்றும் நிகழ்வுகளுடன் இவ்விழா தொடங்கியது.
காணொளி மூலம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஸ்ரீ மாதா அம்ருதா னந்தமயி தேவியின் (அம்மா) ஆசியுரை இடம்பெற்றது.
மாதா அம்ருதானந்த மயி மடத்தின் பொரு ளாளர் ஸ்வாமி இராம கிருஷ்ணானந்தபுரி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் ஆண்டு அறிக்கையை பேராசிரியர் டாக்டர் மனீஷா வினோதினி ரமேஷ் வெளியிட்டார்.
பட்டமளிப்பு விழாவில், இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது:, நாம் தொழில்துறை 4.0 – செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், 3டி பிரிண்டிங், இணையம் மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றின் சகாப்தத்தில் வாழ்கிறோம்.
நீங்கள் ஒரு பட்டம் பெற்றுள்ளீர்கள், இது உங்களை சமூகத்திற்கு சேவை செய்யத் தகுதியுடையவர்களாக ஆக்குகிறது. நீங்கள் முனைவர் பட்டம் பெற்றவராகவோ அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவராகவோ இருக்கலாம், ஆனால் ஒழுக்கமும், குணநலன்களும் மிகவும் இன்றியமை யாதவையாகும்.
ஸ்வாமி விவேகானந்தர் அண்டை நாட்டில் ஒரு முறை கூறியது போல், ‘உங்கள் நாட்டில், ஒரு தையல்காரர் ஒரு மனிதனை உருவாக்குகிறார்; நம் நாட்டில், குணம் ஒரு மனிதனை உருவாக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் கௌரவ விருந்தினருமான நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில், “இன்று, உலகிற்கு திறமையான நிபுணர்கள் மட்டும் தேவையில்லை. நல்லொழுக்கமும், குணநலனும் கொண்டவர் களே தேவை, என்றார்.
இந்த நிகழ்வில் திறமையான மாணவர்களுக்கு முனைவர் பட்டம் மற்றும் பல்கலைக்கழக பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில், துணைவேந்தர் டாக்டர் பி.வெங்கட்ரங்கன் ஒரு தொலைநோக்கு அறிக்கையை வழங்கினார்.
அதாவது, “பட்டமளிப்பு நாள் 2025: மகிழ்ச்சி, பெருமை மற்றும் உத்வேகத்தின் கண்ணோட்டம்“ என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக 1990 களின் முற்பகுதியில் பல்கலைக்கழகத்தால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்ருதாவின் பாரம்பரிய பட்டமளிப்பு உடையை பட்டதாரிகள் அணிந்தனர்.
பொறியியல் துறையின் டீன் டாக்டர் சசங்கன் ராமநாதன் நன்றி கூறினார்.



