உலகத் தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் தனிப்பட்ட கவனத்துடன் செயல் பட்டுவரும் கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை தனது அவசர கால மருத்துவத் துறை சார்பாக, “அவசர கால சூழ்நிலைகளில் காயங்களுக்கான தீவிர சிகிச்சை” (AMTEC 2026) என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு மற்றும் நேரடி பயிற்சி வகுப்பை ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தனது மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான மக்கள் விபத்து மற்றும் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இது இறப்பு மற்றும் உடல்நல பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
முறையான மற்றும் ஆதாரபூர்வமான விபத்து சிகிச்சைக்கான தேவையை உணர்ந்து, ‘லெவல் 1’ விபத்து சிகிச்சை மையமான கேஎம்சிஹெச், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஒரு மணி நேரத்திற்குள் (Golden Hour) அவசர கால சிகிச்சையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியது.
இந்த கருத்தரங்கில் நிபுணர்களின் உரைகள், மாதிரிப் பயிற்சிகள் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் சுவாச மேலாண்மை, அதிர்ச்சி சிகிச்சை, மூளை காயம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அவசர சிகிச்சை, எலும்பு முறிவு காயங்கள் மற்றும் நவீன விபத்து கால உயிர் காக்கும் சிகிச்சைகள் (ATLS) குறித்து விளக்கப்பட்டது. மேலும், EFAST, ECMO, சென்ட்ரல் லைன் பொருத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை சுவாச நுட்பங்கள் போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இடம் பெற்றன.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றுகையில், சிறந்த வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களுடன் கேஎம்சிஹெச் மருத்துவமனை மேற்கு தமிழகத்தில் விபத்துக்கால சிகிச்சையில் முதல்நிலை மையமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கு வெற்றி கரமாக நடை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ இயக்குனர் டாக்டர் ஏ.என்.முருகன் மற்றும் அவசரகால மருத்துவத் துறையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மருத்துவர் கே.திலீபன் மற்றும் மருத்துவர் கே.தாரகராம் ஆகியோரை கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி பாராட்டினார்.
இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிபுணர்கள், ஆலோசகர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.



