இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், ரூ.2.50 கோடி மற்றும் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 50 இலட்சம் என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைய உள்ளது.
இதற்கான பூமி பூஜை பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, அட்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி, பேரூர் கழக செயலாளர்கள் பொன்.நல்லதம்பி, ராஜேஷ் குமார், சுப்பிரமணி, மற்றும் நகராட்சி ஆணையாளர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இராஜேஸ்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தன், ராசிபுரத்திற்கு விளையாட்டு மைதானம் அமைக்க துணை முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று, துணை முதல்வர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, தமிழக அரசு நிதியாக ரூ.2.50 கோடி மற்றும் அமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கியதிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



