நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன் அண்மைக்காலமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
அதிமுகவுடன் கூட்டணி இருந்திருந்தால் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். கூட்டணி இல்லாமல் போனதற்கு அண்ணாமலையே காரணம் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அண்ணாமலை வைத்திருக்கும் வார் ரூம் ஆட்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. தமிழிசைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரள, அண்ணாமலை தரப்பு இந்த விஷயத்தை டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. தமிழிசை சவுந்தரராஜனும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் பேசியிருக்கக் கூடாது என்றும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடைக்கு வந்த தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார்.
அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்து கண்டிக்கும் தொனியில் பேசினார். தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுத்து கோபமாக பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. இதன் மூலம் தமிழக பாஜகவில் உள்ள உட்கட்சிப் பூசல் அம்பலத்துக்கு வந்துள்ளது.
கட்சியின் மாநில தலைவராக இருந்தவரை, இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்தவரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா நடந்து கொண்டது முறையல்ல என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. உண்மையில் என்ன பேசியிருப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
இதுதொடர்பாக சென்னை திரும்பிய தமிழிசையிடம் கேட்டபோது, பதில் அளிக்காமல் , அனைத்தும் ஓகே என்பதுபோல் கையை உயர்த்திக் காட்டிச் சென்றார்.
அப்படி அமித்ஷா என்ன சொன்னார்? ஏன் இப்படி கடுமை காட்டினார் என்பது கட்சிகள் கடந்தும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது. இதனிடையே தமிழிசைக்கு மட்டுமல்ல அண்ணாமலைக்கும் கட்சியில் சிக்கல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக அண்ணாமலை கூறினாலும் அவரது நடவடிக்கைகள் கட்சிக்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பாக மூத்த தலைவர்களை வார் ரூம் மூலம் அவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார் எனவும் பல்வேறு புகார்கள் மேல் இடத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக பாஜகவில் நிலவும் தற்போதைய பிரச்சனை குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்குமாறு கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் ஒருசில நாட்களில் தமிழக பாஜகவில் பல்வேறு அதிரடி திருப்பங்கள், மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்!