fbpx
Homeதலையங்கம்மளிகைப்பொருட்கள் விற்க தயாராகும் ரேஷன் கடைகள்!

மளிகைப்பொருட்கள் விற்க தயாராகும் ரேஷன் கடைகள்!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அரசு தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 35,323 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 10,279 நியாய விலை கடைகள் பகுதிநேர கடைகளாகும். ரேஷன் கடைகளில் பல அதிரடி மாற்றங்களை புகுத்திய திமுக அரசு, அதனை அடுத்தக் கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் மினி சூப்பர் மார்க்கெட்களை போல் மளிகைப் பொருட்களை பாக்கெட்கள் போட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதனை விரிவுப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட முடிவுகளை அரசு எடுக்கும் எனத் தெரிகிறது.

அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் பொதுவாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் மட்டும் டான்டீ டீத்தூள் மற்றும் உப்பு உள்ளிட்ட சில பொருட்கள் விற்கப்படுகிறது.

மாவட்டம் ஒன்றுக்கு 20 கடைகளை மட்டும் முதற்கட்டமாக தேர்வு செய்து அங்கு மளிகைப் பொருட்கள் விற்பனை திட்டம் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனால் எங்கெங்கு மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம் என்பதற்காக குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்ட போதே அவர் நிச்சயம் இந்த துறையில் ஒரு புதுமையை புகுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் பல அதிரடி மாற்றங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறையில் நடக்க ஆரம்பித்துள்ளன.

மக்களுக்கு பயன்தரும் நல்ல திட்டப் பயன்களை நுகர நாமும் தயாராவோம்!

படிக்க வேண்டும்

spot_img