நாடு முழுவதும் விவசாயிகளின் அதிருப்தியை சம்பாதித்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இது விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாக நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும், இந்த சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்களையும் நினைத்து பார்க்க வேண்டியது அவசியம்.
விவசாய பொருட்கள், வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவை சட்டம் ஆகிய 3 சட்ட மசோதாக்களையும் ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை மனதில் வைத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதனால் விவசாயிகள் மட்டுமல்ல, விவசாய தொழிலே அடியோடு பாதிக்கப்படும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் நிரந்தரமாக தங்கி ஓராண்டாக ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. பேச்சுவார்த்தையும் சுமூக தீர்வை தரவில்லை. மழை, பருவநிலை மாற்றம், புயல் சேதம் ஆகியவற்றுக்கு இடையில் விவசாயிகள் தங்கள் பணிகளை செய்கின்றனர்.
மற்ற துறை போன்று விவசாய துறை எப்போதும் சீராக நடக்க கூடியது அல்ல. எனவே விவசாயிகள் நிரந்தர வருமானம் பெறுவது என்பது சாத்தியமற்றது. எனவே புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.
அதே நேரம் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது மற்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய நலன் கருதி ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடிவு செய்தால், முதலில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பதே விவசாய அமைப்புகளின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் ஆகும்.



