இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தின விழா, வ.உ.சிதம்பரனார் துறைமுக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF), துறைமுகத் தீயணைப்புப் படை வீரர்கள், துறைமுகப் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
தொடர்ந்து அவர், அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதையும், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக உருவெடுத்ததையும் நினைவுகூரும் வகையில் ஜனவரி 26 இன் வரலாற்று முக்கியத்துவத்தைப் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தை வடிவமைப்பதில் தேசிய தலைவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியான தலைமைத்துவத்திற்காக நாட்டின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் துறைமுகத்தின் வலிமையான செயல்திறனை எடுத்துரைத்தார்.
நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 2025 வரையிலான 31.97 மில்லியன் டன் சரக்குகளை துறைமுகம் கையாண்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், 2025 26 நிதியாண்டில் 6,42,454 டிஇயு சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது 2024-25 நிதியாண்டின் அதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 5,81,557 டிஇயு சரக்கு பெட்டகங்களை ஒப்பிடுகையில் 10:47 % சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். வெளித் துறைமுக (Outer Harbour) திட்டத்திற்கு ஒப்பந்தங்களைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அமையவிற்கும் இரண்டு சரக்கு பெட்டக முனையங்களில் 1000 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் தளம், 18 மீட்டர் மிதவை ஆழம் மற்றும் 4 மில்லியன டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறினார்.
செயல்பாட்டு திறனை அதிகரிக்கவும் நவீனமயமாதலை ஊக்குவிக்கவும் முக்கியமான ஒரு நடவடிக்கையாக மின்சாரத்தில் இயங்கும் சரக்குகளை கையாளும் இயந்திரத்தினை (E-Payloader) கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய உடற்பயிற்சி மையம் மற்றும் துறைமுக மருத்துவமனையில் காத்து மூக்கு தொண்டை (ENT) பணி நிலையத்தினையும் தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக, துறைமுக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பும் உற்சாகமும் சேர்க்கும் வகையில், துறைமுக பள்ளி மாணவர்கள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.



