கட்டுமான துறையில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வீட்டு கடன்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் கட்டுமான துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இதில் கோவை உட்பட கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கட்டுமான துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா, வங்கியின் கோவை நிர்வாக அலுவலக துணைப்பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான துறையில் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கும் பல்வேறு சலுகை திட்டங்கள் குறித்து பேசினர்.
மேலும் வீட்டு கடனில் வங்கி சேவை கூடுதல் கவனம் செலுத்தும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா, ரியல் எஸ்டேட், டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் கட்டுமான துறை சார்ந்த கடன் வழங்குவதில் எஸ்.பி.ஐ. கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் வீடு அல்லது வீட்டு மனைக்கு உடனடிக் கடன் வசதி அளிக்க பாரத ஸ்டேட் வங்கி முன்னுரிமை வழங்க உள்ளதாகவும் கூறினார்.



